Friday, May 1, 2020

நற்றிணை - கடவுள் வாழ்த்து

நேரிசை ஆசிரியப்பா

மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்புமெய் யாக
த் திசைகை யாகப்

பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே


திணை : பாடாண்
துறை : கடவுள் வாழ்த்து
பாடியவர் : பெருந்தேவனார்

பொருள்:
மாநிலம் சேவடி ஆக - பரந்த நிலமானது சிவந்த பாதங்களாகவும்

தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை ஆக - சங்குகள் ஒலிக்கும் தூய நீரையுடைய கடலானது ஆடையாகவும்
விசும்பு மெய் ஆக - பரந்த வானமானது உடலாகவும்
திசை கை ஆக - திசைகளானவை கைகளாகவும்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக - குளிர்ந்த கதிர்களை வீசும் நிலவும், வெப்பக் கதிர்களை வீசும் சூரியனும் இரு கணகளாகவும்
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய - பொருள்களாகவும், உயிர்களாகவும் அமைந்த எல்லாவற்றையும் அதன்பண்புகளையும் தெரிந்து தனக்குள் அடக்கிக்கொண்டுள்ள
வேத முதல்வன் என்ப - மறைகளால் முதல்வன் எனக்கருதப்படுபவன்
தீது அற விளங்கிய திகிரியோனே - தீமைகள் நீங்கிய சக்கராயுதத்தை உடையவனாகிய திருமால் ஆவான்.

இலக்கணக் குறிப்பு:
சேவடி, பசுங்கதிர், தூநீர் - பண்புத்தொகை