Tuesday, October 11, 2011

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 11

ஒன்னு எலுமிச்சங் கன்னு
ரெண்டு ரோசாப்பூ செண்டு
மூணு முருங்கப்பட்டை தோலு
நாலு நாய்க்குட்டி வாலு
அஞ்சு ஆயா தலை பஞ்சு
ஆறு அருவாமனை கூரு
ஏழு ஏணி மேல ஏறு
எட்டு குரங்குத் தலையை வெட்டு
ஒம்பது தண்ணி வந்து ரொம்புது
பத்து பல்ல பாத்துக் குத்து


ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண்ணிரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து

Saturday, September 17, 2011

நக்கீரனா? நமசிவாயனா?

நமசிவாயன் கூற்று:
அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீருகீர் என்றுஅறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

நக்கீரன் கூற்று:
சங்கறுப்ப(து) எங்க(ள்)குலம் சங்கரர்க்(கு)அங்(கு) ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி

Friday, September 16, 2011

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 10

பச்சை மிளகாய் காரம்
பன்னிரண்டு மணி நேரம்
டீச்சர் வந்தாங்க
டியூப்லைட் போட்டாங்க
வாத்தியார் வந்தாங்க
வணக்கம் சொன்னாங்க!
----------------------------------
தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
தம்பிக்கு ஒன்னு
பாப்பாவுக்கு ஜீரோ
தின்னத் தின்ன ஆசை!
இன்னும் கேட்டா பூசை!!

Monday, April 11, 2011

மழலை நினைவுகள் மலரட்டுமே - 9

அத்தை வீட்டுக்குப் போனேன்
ஆப்பிள் பழம் தந்தாங்க
வேணாம் வேணாம்னு சொன்னேன்
வெளியே வந்து பார்த்தேன்

வெளியெல்லாம் பாம்பு
பாம்படிக்கக் கோலெடுத்தேன்
கோலெல்லாம் சேறு
சேறு கழுவ ஆத்துக்குப் போனேன்
ஆறெல்லாம் மீனு
மீனு புடிக்க வலையெடுத்தேன்

வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசி எடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியம்மா வெள்ளி
வெத்தலை பாக்கு கிள்ளி