Saturday, April 26, 2014

நற்றிணை 1 - நறுநுதல் பசத்தல் அஞ்சுவன்

நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே
 
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

-----------------------------------------------------------------------------

நின்ற சொல்லர் - வாக்கு தவறாதவர்

நீடு தோன்று இனியர் - என்றும் இனிமை உடையவர்

என்றும் என் தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என்னை விட்டுப் பிரியாதவர்

தாமரைத் தண்தாது ஊதி சாந்தின் மீமிசை தொடுத்த தீந்தேன் - தாமரையினின்று குளிர்ந்த தாதினை எடுத்துச் சந்தன மரத்தின் மீது வைக்கப்பட்ட இனிய தேன்

புரைய மன்ற புரையோர் கேண்மை - உயர்வானவரின் உயர்ந்த, நிலையான நட்பு

நீர் இன்று அமையா உலகம் - உலகம் நீரின்றி அமையாது

தம் இன்று அமையா நம் நயந்து அருளி - தாம்(தலைவன்) இன்றி அமையாத நம்மை(தலைவி), விரும்பி அருளி

நறுநுதல் பசத்தல் அஞ்சி - மணம்பொருந்திய என் நெற்றி, பிரிவாற்றாமையினால் பொலிவிழந்து போகுதலுக்கு அஞ்சி

சிறுமை உறுப - கீழ்மை தருவன

செய்பு அறியலர் - செய்யத் தெரியாதவர்
-----------------------------------------------------------------------------

சொற்பொருள்:

புரைய - உயர்ந்த
மன்ற - நிலையான
புரையோர் - உயர்ந்தோர்
கேண்மை - நட்பு
நறுநுதல் - திலக முதலியவற்றால் மணம்பொருந்திய நெற்றி
பசத்தல் - பிரிவாற்றாமைத் துயரத்தால் பொலிவிழந்து போதல்
அஞ்சி - பயந்து

இலக்கணக் குறிப்பு:

மீமிசை - ஒருபொருட் பன்மொழி 

No comments:

Post a Comment