Friday, May 9, 2014

நற்றிணை 4 - கொண்டுஞ் செல்வர்கொல் தோழி

கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்  
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்   
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி  
யங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொ  
டலரே, அன்னை யறியின்இவண் உறைவாழ்க்கை  
அரிய வாகும் நமக்கெனக் கூறிற்  
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்  
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்  
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்  
மணல்மடுத் துரறும் ஓசை கழனிக்   
கருங்கால் வெண்குருகு வெரூஉம்  
இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே. 


பொருள் :

கானல் - கடற்கரைச் சோலை

அம் சிறுகுடி - அழகிய சிறிய ஊரின்

கடல்மேம் பரதவர் - கடல்மேல் செல்லும் பரதவர்

மேம் - மேவும்

நீனிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇ - நீல நிறப் புன்னைமரத்தின் பெரிய நிழலில் தங்கி

தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி - குளிர்ந்த பெரிய பரந்துபட்ட கடலின், நல்ல காலநிலையை நோக்கி

அம் கண் அரில் வலை -  பின்னல்களையுடைய, அழகிய கண்களையுடைய மீன் வலையை

உணக்கும் - உலர்த்தும்

துறைவனொடு - பகுதியைச் சேர்ந்தவனோடு

அலரே - தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றி ஊரார் புறங்கூறுதல்

அன்னை அறியின் - தலைவியின் தாய் அறிந்தால்

இவண் உறை வாழ்க்கை - இங்கு வாழும் வாழ்க்கை

அரிய ஆகும் நமக்கு எனக் கூறின் - நிலைக்காமல் போய்விடும்

உமணர் - உப்பு வாணிகர்

வெண்கல் உப்பின் - வெண்மையான் கல்லுப்பின்

கொள்ளை - விலை

சாற்றி - கூறி, எடுத்துரைத்து

கணநிரை கிளர்க்கும் - கூட்டத்தைக் கலைத்து

நெடுநெறிச் சகடம் - நீண்ட வழியில் செல்லும் வண்டிகள்

மணல் மடுத்து - மணலில் அமிழ்ந்து

உரறும் ஓசை - பெரிதாகச் சத்தமிடும் ஓசையைக் கேட்டு

கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் - வயலில் வாழும் கரிய கால்களையுடைய வெள்ளை நாரைகள் அஞ்சும்.

இருங்கழி - கடலையடுத்த உப்புநீர்ப்பரப்பு

சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே - அதனை ஒட்டிய தம் உறைவிடமாகிய ஊருக்கு

கொண்டும் செல்வர்கொல் தோழி - நம்மை அழைத்துக் கொண்டு போவாரா? எனத் தோழியிடம் வினவுதல்


இலக்கணக் குறிப்பு :

சிறுகுடி, தண்பெரும்பரப்பு, ஒண்பதம், வெண்கல் - பண்புத்தொகைகள்

அசைஇ - வினையெச்சம்,  சொல்லிசை அளபெடை

உறைவாழ்க்கை - வினைத்தொகை

Thursday, May 1, 2014

நற்றிணை 3 - இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழுது

ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன இனியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே


பாடியவர் : இளங்கீரனார்
திணை : பாலை
துறை : முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருள் :
ஈன்பருந்து உயவும் - தனது பார்ப்பை ஈன்ற பருந்து வருந்துகின்ற

வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் - வானளாவ உயர்ந்த நெடிய
கிளைகளைக் கொண்டதும், சிறிய அடியை உடையதுமாகிய வேப்ப மரத்தின்

புள்ளி நீழல் - சிறு நிழலில்

கட்டளை அன்ன - தரத்தை அறிய உதவும் கல் போன்று,  விளையாட்டிற்குத் தேவையான அடிப்படைக் கோடுகள் கொண்டு (Basic lines using which the rules of the game are determined)

வட்டு அரங்கு இழைத்து - வட்டு விளையாட்டிற்கான அரங்கம் அமைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - பாமரச் சிறுவர்கள் நெல்லி வட்டு (நெல்லிக்காயைக் கோலிக்குண்டாகக் கொண்டு) விளையாடும்

வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் - வில்லேந்திய வேடர்கள் வாழும் வெவ்விய சிற்றூர்

சுரன்முதல் வந்த - வழியே வந்த

உரன்மாய் மாலை -  களைப்பினால் வலிமை இழந்த மாலையில்

உள்ளிய வினைமுடித்து  அன்ன இனியோள் - எண்ணிய செயலை முடித்தலால் பெறும் மகிழ்ச்சியைப் போன்ற இனியவள்

மனைமாண் சுடரொடு - வீட்டில் பெருமைமிக்க தீபமாகிய விளக்கை ஏற்றி வைத்து 

படர்பொழுது எனவே -  (ஏக்கத்துடன் காத்திருந்து கழிக்கும்) இருள் படர்ந்துகொண்டிருக்கும் பொழுது என

உள்ளினென் அல்லனோ யானே - நான் நினைத்தவன் அல்லவோ

அருஞ்சொற்பொருள்:

ஈன் - ஈனும், பெற்றெடுக்கும்
உயவும் - வருந்தும்
வான்பொரு - வான் அளாவும்
நெடுஞ்சினை - நெடிய கிளை
சினை - உறுப்பு (கிளை)
பொரியரை - மரத்தின் பொரிந்த அரைப்பகுதி (அடிப்பகுதி)
நீழல் - நிழல்
அன்ன - போன்ற
உள்ளிய - நினைத்த


இலக்கணக்குறிப்பு:

ஈன்பருந்து - வினைத்தொகை
பொருநெடுஞ்சினை - வினைத்தொகை
நெடுஞ்சினை - பண்புத்தொகை
நெடுஞ்சினை பொரியரை - உம்மைத்தொகை
பொரியரை - வினைத்தொகை
அன்ன - உவம உருபு
கல்லா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
சிறாஅர் - இசைநிறை அளபெடை
வெம்முனை - பண்புத்தொகை
சீறூர் - பண்புத்தொகை
உரன்மாய் மாலை - வினைத்தொகை


Sunday, April 27, 2014

நற்றிணை 2 - இளையோன் உள்ளம்

அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்
தொலிவல் ஈந்தின் உலவை யங்காட்
டாறுசெல் மாக்கள் சென்னி யெறிந்த
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை
மரல்நோக்கும் இண்டிவர் ஈங்கைய சுரனே
வையெயிற் றையள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோ னுள்ளங்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே


பாடியவர் : பெரும்பதுமனார்
திணை: பாலை
துறை : உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது
(கொடுங்காட்டின் வழியே தலைவியை அழைத்துச் செல்லும் தலைவனைப் பார்த்து வழியில் கண்டார் கூறியது)

---------------------------------------------------------

பெருந்தண் குன்றத்து -  பெரிய குளிர்ந்த மலையில்

அழுந்துபட வீழ்ந்த  - அடர்த்தியான

ஒலி வல் ஈந்தின் - தழைத்த வலிமையான ஈத்த மரங்களையுடைய

உலவை அம் காட்டு - சுழன்று வீசும் காற்றை உடைய அழகிய காட்டின்

ஆறுசெல் மாக்கள்  - வழியே செல்லும் மக்கள் மீது

சென்னி எறிந்த - தலையை மோதி

செம்மறுத் தலைய -  சிவந்த மாறுபட்ட தலையை உடைய

நெய்த்தோர் வாய - இரத்தம் பூசிய வாயையுடைய

பெருந்தலை வல்லியம் குருளை - பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்

மாலை மரல் நோக்கும் - இம் மாலைப் பொழுதில், பெருங்குரும்பைச் செடியின்கண் பதுங்கி இருந்து நோக்கும்

இண்டு இவர் ஈங்கைய - இண்டங் கொடியுடன் படர்கின்ற ஈங்கைக் கொடியை உடைய

சுரன் - வழியில்

வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - கூரிய பற்களையுடைய தலைவியை முன்னே செல்லவிடுத்து

எல்லிடை நீங்கும் இளையோனுள்ளம் - இரவுப் பொழுதில் (பின்னே) செல்லும், இந்த இளைஞனின் உள்ளமானது

காலொடுபட்ட மாரி - காற்றோடு கலந்து பெய்யும் மழை

மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிது- பெரிய மலைகளில் முகிலானது மோதி ஏற்படுத்தும் மின்னல் மற்றும் இடியை விடக் கொடியதாய் இருக்கிறது.

---------------------------------------------------------
சொற்பொருள்:

தண் - குளிர்ச்சி
அழுந்து - அடர்ந்து
குன்றம் - மலை
ஒலிதல் - தழைத்தல்
ஈந்து - ஈத்த மரம்
உலவை - காற்று
அம் - அழகு
ஆறு - வழி
சென்னி - தலை
செம் - சிவந்த
மறு - மாறுபட்ட
நெய்த்தோர் - இரத்தம்
வல்லியம் - புலி
குருளை - குட்டி
மரல் - பெருங்குரும்பைச் செடி (Bowstring hemp)
இண்டு - இண்டங்கொடி (Acacia pennata)
ஈங்கை - ஈங்கைக்கொடி (Mimosa rubicaulis), (இண்டஞ்செடி எனவும் வழங்கப் படுகிறது)

சுரம் - வழி, பாதை
வை - கூரிய
எயிறு - பல
ஐயள் - தலைவி
மடந்தை - பெண்
எல் - ஒளி, ஒளிர்வு, பளபளப்பு, சூரியன், பகல், திடம், வலிமை, இரவு
கால் - காற்று
மாரி - மழை
மால்வரை - பெரிய மலை
மிளிர்க்கும் - மின்னும்
உரும் - இடி

 

Saturday, April 26, 2014

நற்றிணை 1 - நறுநுதல் பசத்தல் அஞ்சுவன்

நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே
 
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

-----------------------------------------------------------------------------

நின்ற சொல்லர் - வாக்கு தவறாதவர்

நீடு தோன்று இனியர் - என்றும் இனிமை உடையவர்

என்றும் என் தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என்னை விட்டுப் பிரியாதவர்

தாமரைத் தண்தாது ஊதி சாந்தின் மீமிசை தொடுத்த தீந்தேன் - தாமரையினின்று குளிர்ந்த தாதினை எடுத்துச் சந்தன மரத்தின் மீது வைக்கப்பட்ட இனிய தேன்

புரைய மன்ற புரையோர் கேண்மை - உயர்வானவரின் உயர்ந்த, நிலையான நட்பு

நீர் இன்று அமையா உலகம் - உலகம் நீரின்றி அமையாது

தம் இன்று அமையா நம் நயந்து அருளி - தாம்(தலைவன்) இன்றி அமையாத நம்மை(தலைவி), விரும்பி அருளி

நறுநுதல் பசத்தல் அஞ்சி - மணம்பொருந்திய என் நெற்றி, பிரிவாற்றாமையினால் பொலிவிழந்து போகுதலுக்கு அஞ்சி

சிறுமை உறுப - கீழ்மை தருவன

செய்பு அறியலர் - செய்யத் தெரியாதவர்
-----------------------------------------------------------------------------

சொற்பொருள்:

புரைய - உயர்ந்த
மன்ற - நிலையான
புரையோர் - உயர்ந்தோர்
கேண்மை - நட்பு
நறுநுதல் - திலக முதலியவற்றால் மணம்பொருந்திய நெற்றி
பசத்தல் - பிரிவாற்றாமைத் துயரத்தால் பொலிவிழந்து போதல்
அஞ்சி - பயந்து

இலக்கணக் குறிப்பு:

மீமிசை - ஒருபொருட் பன்மொழி