Saturday, December 4, 2010

இராமாயணமும் மகாபாரதமும்

1.
முக்காலை எடுத்து மூவிரண்டு போகையிலே
ஐந்துதலை நாகம் ஆழமாய்க் கடித்தது.


பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலை வாங்கித் தேய்
 
2.
சந்தனக் கிண்ணம் கைக்கொண்டு
நாலு பேருக்கு
நடுவே போகும் நாயகமே!
ஐமுகப் புலி
நாலு மாகாணியில் பட்டு,
எட்டு மாகாணியில் கட்டி,
பதினாறு மாகாணியில் பாய்ந்ததுவே!


சூரியனுக்குப் புத்திரன்
புத்திரனுக்குச் சத்துரு
சத்துருவுக்கு மைத்துனன்
மைத்துனனுக்கு மைத்துனன்
தாயாரைக் கேட்டால்
பதிலுண்டு மன்னவா!

அங்கன்னா அமுக்கன்னா

மாற்றாந்தாய்க் கொடுமையைப் பற்றிச் சொல்லப்பட்ட வரிகள் இவை.

கிட்டத்தட்ட முந்தானை முடிச்சு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைப் போல,
 
அங்கன்னா அமுக்கன்னா
இங்கன்னா தூவன்னா
சொகன்னா சோகன்னா
சொல்லப்போனா கோவன்னா

Saturday, November 27, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 8

1.
டிக் டிக்

யாரது?
திருடன்

என்ன வேண்டும்?
நகை வேண்டும்

என்ன நகை
கலர் நகை

என்ன கலர்?
(ஏதோ ஒரு கலர் பதிலாக வரும்போது எல்லாரும் அந்த நிறத்தைத் தேடி ஓடித் தொட்டுக்கொண்டிருப்பர். அப்படித் தொட முடியாதவரை வந்து அவுட் ஆக்குவார் திருடன்).
 
2.
உங்கப்பா எங்கப்பா தகர டப்பா!
உங்கம்மா எங்கம்மா மனோரம்மா!
உங்கண்ணன் எங்கண்ணன் கமலக்கண்ணன்!
உங்கண்ணி எங்கண்ணி தேங்கா தண்ணி!
உங்கத்தை எங்கத்தை தேங்கா பத்தை!
 
3.
லாபா சீட்
அஞ்சு ரூபா நோட்
பொட்டில வச்சி பூட்
கல்லா? மண்ணா?
கல்லு
கல்லுலே நிக்குறேன் வெக்கமில்லையா?
மண்ணு
மண்ணுலே நிக்குறேன் வெக்கமில்லையா?
 
4.
கொக்கு பறபற
கோழி பறபற
மைனா பறபற
அம்மி பறபற
பட்டம் பறபற
குண்டான் பறபற
....
....
(பறக்காத பொருளுக்குக் கையசைப்பவரும், பறக்கும் பொருளுக்குக் 
கையசைக்காதவரும் அவுட்).

Monday, November 15, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 7

1.
யாரோ தலையில
  ஆட்டுக்குட்டி மேயுதாம்
போறவங்க வர்றவங்க
  சொல்லாம போங்க.

2.
வச்சா வச்சா வாழப்பழம்
வாயில வச்சா கொய்யாப் பழம்
இட்டா இட்டா எலுமிச்சங்காய்
இடாட்டா நார்த்தங்காய்
கும் குத்துறேன் கும்

3.
வாடி என் மச்சி
வாழைக்காய் பஜ்ஜி
உன் தோல உரிச்சி
போட்டுடுவேன் பஜ்ஜி

Monday, October 25, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 6

1.
இரு இரு எங்க அம்மாகிட்ட சொல்றேன்...

சொல்லிக்கோ!
சொம்பெடுத்து மாட்டிக்கோ!
ஜெயிலுக்குள்ளார பூந்துக்கோ!
கத்தி எடுத்துக் குத்திக்கோ!
'லபலப'ன்னு அடிச்சுக்கோ!

2.
எண்ணி எண்ணிப் பார்த்தா எட்டணா குறையுது
எதிர்வீட்டுப் பொண்ணு எட்டி எட்டிப் பாக்குது.
பக்கத்து வீட்டுப் பொண்ணு பல்ல பல்ல காட்டுது
நடுவீட்டுப் பொண்ணு நல்லாத்தான் சிரிக்குது

Saturday, October 9, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 5

1.
ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.

2.
அயிரு வந்தாராம்
தயிரு குடிச்சாராம்
மாடிக்குப் போனாராம்
ரேடியோ போட்டாராம்
'சின்னக் குயில் பாட்டு பாடுது
அயிரு தலைக்குடுமி ஆடுது'

Friday, October 8, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 4

1.
அடே போடா நோஞ்சான்
ஒரே குத்துல சாஞ்சான்
கும்பகோணம் போனான்
குனிஞ்சு நிமிர்ந்து வந்தான்
வண்ணாரப்பேட்டை மாணிக்கம்
பேரைச் சொன்னா கோணிக்கும்

2.
எட்டெட்டும் பதினாறு
உங்கப்பன் கோனாரு
ஆத்துக்குப் போனாரு
நண்டு புடிச்சாரு
சுட்டுத் தின்னாரு
சுருண்டு விழுந்தாரு

Friday, October 1, 2010

பாத்தியாடி மாமியத்த...

தெருக்கூத்தில் கட்டியங்காரன் சொல்லும் கதைகளுள் இதுவும் ஒன்று.

ஒரு மாமியாரும் மருமகளும் ஓர் இழவு வீட்டிற்குச் சென்றார்களாம். அப்போது ஒப்பாரி வைத்துப் பாட்டுப் பாடினார்களாம். அதனடுவே அந்த வீட்டில் அவரைக்கொடிப் பந்தலைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகளாம் இவை. 

பாத்தியாடி மாமியத்த...
பந்தலில அவரக்காய! (மருமகள்)

பொறுத்துக்கடி மருமகளே...! 
போகும்போது பறிச்சிக்கலாம்... (மாமியார்)

அது வெரைக்கு விட்ட அவரக்காய்...
விரலால தொடாதீங்க... (வீட்டுக்காரம்மா)

Saturday, September 25, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 3

1.
மழைவருது மழைவருது நெல்லு வாருங்கோ
நான்போய் கிணத்துல விழுறேன் என்ன பிடிங்கோ
மூணுபடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்கோ
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ
சும்மா இருக்கும் மாமனுக்கு சூடு வையுங்கோ
 
2.
கத்திரிக்கா தோட்டத்துல பூச்சிக்காரன்
எட்டி எட்டிப் பார்க்கிறான் மீசைக்காரன்
சுண்ணாம்பு சட்டியில சோறாக்கி
சுடச்சுட மாமனுக்குப் போட்டாச்சு 
என்ன குழம்பு கேட்டாச்சு
கருவாட்டுக் குழம்புடா கம்னேட்டி
 
3.
தொப்பி மாமா வந்தாராம்
தொப்பியைக் கழட்டிப் போட்டாராம்
சாக்குப் பையை எடுத்தாராம்
சரசரன்னு போனாராம்
சருக்கடிச்சு விழுந்தாராம்

Friday, September 24, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 2

1. திரிதிரி பந்து

திரிதிரி பந்து
திருநாள் பந்து!
திரும்பிப் பார்த்தா,
ஒரு கொட்டு!

2. குத்தாங் குத்தாந் தாமாளம்

குத்தாங் குத்தாந் தாமாளம்
கோடாலி தாமாளம்

உங்கப்பன் பேரு என்ன? முருங்கப்பூ
முருங்கப் பூவத் தின்னவனே!
பாலும் பழமும் குடிச்சவனே!
பாப்பாத்தியம்மா கையெடுத்துக்கோ!

நெத்தியில என்ன? ரத்தம்
வழிச்சிக் கடாசு
போச்சா போகலையா? போகல
சுடுதண்ணி ஊத்திக் கழுவு.
வாயில என்ன? பச்சரிசி
துப்பு
காதுல என்ன? கம்மல்
கழட்டிக் கடாசு
மூக்குல என்ன? மூக்குத்தி
கழட்டிக் கடாசு
கழுத்துல என்ன? செயினு
அவிழ்த்துக் கடாசு
கையில என்ன? வளையல்
கழட்டிக் கடாசு
கால்ல என்ன? கொலுசு
கழட்டிக் கடாசு
வயித்துல என்ன? பூனைக்குட்டி.
எத்தனை? நாலு.
எனக்கு ஒன்னு தர்றியா?
தரமாட்டேன்.
(கிச்சு கிச்சு மூட்டுதல்)

3. கண்ணாமூச்சி விளையாட்டு

உங்கம்மா என்ன சோறு போட்டாங்க?
புளி சோறு.
ஈ மொய்த்ததா எறும்பு மொய்த்ததா?
எறும்பு மொய்த்தது
எடுத்து சாப்பிட்டாயா எடுக்காம சாப்பிட்டாயா?
எடுத்து சாப்பிட்டேன்.
சரி, போய் ஒரு வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு, வெல்லம் எல்லாம் வாங்கிட்டு வா

Tuesday, September 7, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே!

     சின்ன வயதில் நினைவாற்றலை வளர்க்கவும், வார்த்தைகள் பழகவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட தொடர் வரிகள் திடீரென்று நினைவுக்கு வந்தன. அவை சந்த நயமுள்ளவை. எனக்கு நினைவில் இருக்கும் இரண்டு தொடர்களைக் கீழே கொடுக்கிறேன்.

1.ரிப்பன் ரிப்பன் - கும்மாங் குத்து

ரிப்பன் ரிப்பன்

என்ன ரிப்பன்?
பச்சை ரிப்பன்

என்ன பச்சை?
மா பச்சை

என்ன மா?
டீச்சரம்மா

என்ன டீச்சர்?
கணக்கு டீச்சர்

என்ன கணக்கு?
வீட்டுக் கணக்கு

என்ன வீடு?
மாடி வீடு

என்ன மாடி?
மொட்டை மாடி

என்ன மொட்டை?
பழனி மொட்டை

என்ன பழனி?
வட பழனி

என்ன வடை?
ஆமை வடை

என்ன ஆமை?
குளத்தாமை

என்ன குளம்?
திரிகுளம்

என்ன திரி?
விளக்குத்திரி

என்ன விளக்கு?
குத்து விளக்கு

என்ன குத்து?
கும்மாங் குத்து...

(பாவம் பக்கத்தில் இருப்பவர்)

2. கொழுகட்டை - எறும்பு

கொழுகட்டை கொழுகட்டை ஏன் வேகல?
அடுப்பு எரியல நான் வேகல

அடுப்பே அடுப்பே ஏன் எரியல?
விறகு காயல நான் எரியல

விறகே விறகே ஏன் காயல?
மழை பெஞ்சிச்சு நான் காயல

மழையே மழையே ஏன் பெஞ்ச?
புல்லு முளைய நான் பெஞ்சேன்?

புல்லே புல்லே ஏன் முளைஞ்ச?
மாடு மேய நான் முளைஞ்சேன்

மாடே மாடே ஏன் மேஞ்ச?
பாலு கறக்க நான் மேஞ்சேன்?

பாலே பாலே ஏன் கறந்த?
பாப்பா அழுதுச்சு நான் கறந்தேன்?

பாப்பா பாப்பா ஏன் அழுத?
எறும்பு கடிச்சுச்சு நான் அழுதேன்?

எறும்பே எறும்பே ஏன் கடிச்ச?
என் புத்துக்குள்ள கைவிட்டா நான் சும்மா இருப்பேனா?